சென்னை: விடுபட்ட மகளிர்களுக்கு விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழு தின விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: பெண் விடுதலையே மகளிருக்கான முன்னேற்றம் என முழங்கியதுதான் திராவிட இயக்கம். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்கள் காவல்நிலையம் என அனைத்தையும் உருவாக்கியது திமுக.
எங்கள் ஆட்சியில்தான் மகளிருக்கான எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. மகளிர் சுய உதவிக் குழுவினரின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன. இந்தியாவில் அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்க மகளிரின் பங்குதான் காரணம். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறும்போது, “விடுபட்ட மகளிர்களுக்கு விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும்” என்றார்.
The post விடுபட்ட மகளிர்களுக்கு விரைவில் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.