நாசரேத் : நாசரேத் -குரும்பூர் இடையே உள்ளது நாலுமாவடி. இங்குள்ள மெயின் ரோட்டில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், மருத்துவமனை மற்றும் இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரம் உள்ளிட்டவை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது.
இப்பகுதியில் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் பூசப்பட்டிருந்த வெள்ளை வர்ணமும் அழிந்துள்ளது. இதன் காரணமாக இவ்வழியாக செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைக்காமலே வேகத்தடையை கடக்கின்றன.
இதனால் சிறு சிறு விபத்துக்கள் தொடர்ந்து ஏற்படுகிறது. இவ்வழியாக தினமும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்களும் இந்த வழியாகத்தான் சென்று திரும்புகின்றனர்.
எனவே விபத்துகளை தடுக்கும் விதமாக வேகத்தடையின் அளவை அதிகரிப்பதுடன் எச்சரிக்கை வர்ணம் பூச வேண்டுமென மாணவ- மாணவிகள், வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காமராஜர் ஆதித்தனார் கழக செயலாளர் ஐஜினஸ்குமார் கூறுகையில், இந்த ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை தாழ்வாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனிக்காமல் அதிவேகமாக செல்கின்றனர்.
இதனால் சில நேரங்களில் சிறு சிறு விபத்துக்கள் நடப்பதோடு பொதுமக்கள் கீழே விழுந்து காயமடையும் நிலையும் ஏற்படுகிறது. வேகத்தடையை முறையாக அமைக்க வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி விபத்தை தவிர்க்கும் விதமாக வேகத்தடைகளை முறையாக அமைத்து வெள்ளை வர்ணம் பூச வேண்டும், என்றார்.
The post விபத்துகளை தவிர்க்கும் விதமாக நாலுமாவடியில் வேகத்தடைக்கு எச்சரிக்கை வர்ணம் பூசப்படுமா? appeared first on Dinakaran.