விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி என்பவரது குடும்பத்துக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து சிகிச்சையில் உள்ள 6 பேருக்கும் தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த ராமலட்சுமி குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் முதல்வர் வெளியிட்டுள்ள அறிகையில்; “விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், சின்னவாடி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (05.02.2025) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் அருப்புக்கோட்டை வட்டம், வதுவார்பட்டியைச் சேர்ந்த இராமலட்சமி (வயது 50) க/பெ.கோனப்பா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முருகேஸ்வரி (வயது 55), மாணிக்கம் (வயது 50), மகாலட்சமி (வயது 48). வீரலட்சமி (வயது 37) சைமன் டேனியல் (வயது 33) மற்றும் கஸ்தூரி (வயது 33) ஆகிய ஆறு நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
The post விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.