சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக காமராஜர் ஆட்சி நடத்தி வந்தார். இந்நிலையில் 1957-ம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது. விருதுநகர் தொகுதியில் காமராஜர் போட்டியிட்டார். போட்டிக் களம் கடுமையாக இருந்தது. பல்வேறு முணுமுணுப்புகள், குமுறல்கள் கட்சிக்குள் எதிரொலித்தன. காமராஜருக்கு எதிராக காங்கிரசில் பலர் கலகக் குரல் எழுப்பியிருந்தனர் என்பது குறித்தும், அவர்கள் பிரிந்து ‘சீர்திருத்தக் காங்கிரஸ்’ என்ற கட்சியைத் தொடங்கினார்கள் என்பது குறித்தும் முன்னரே கூறியிருந்தேன்.
குறிப்பாக டி.ஜி.கிருஷ்ணமூர்த்தி, கோசல்ராம் போன்றவர்கள் காமராஜரோடு முரண்பட்டு இருந்தாலும், இவர்கள் இருவரும் காங்கிரசிலேயே இருந்தார்கள். கோசல்ராம் பிற்காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘காமராஜர் எங்களை ஏமாற்றி விட்டார். இருந்தாலும் சென்னை மாகாண முதலமைச்சரான அவருக்கு நாங்கள் துணை நிற்போம்’ என்று கூறி அவர்கள் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டனர்.