சென்னை: தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள், ஆலைகள், ஐடி, நிறுவனங்களுக்கான மின்கட்டணம் இன்று முதல் ஒரு கிலோ வாட் ரூ.7.25லிருந்து ரூ.7.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயம், கைதறி, விசைத்தறி, வழிபாட்டு தலங்கள், தாழ்வழுத்த ஆலைக்கு மின்சார மானியம் தொடரும். வீட்டு மின் இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு இல்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அனைத்து வீட்டு மின்இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்கள், விசைத்தறி நுகர்வோர்கள், 50கிலோ வாட் வரை உள்ள தாழ்வழுத்த தொழிற்சாலைகள் மற்றும் 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறுவணிகர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை. இதன்மூலம் 2.83 கோடி மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள். மேலும் தற்போது உள்ள அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்பொழுது மின்கட்டணத்தில் மாற்றம் செய்துவருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்லாண்டு மின்கட்டண உயர்வை அறிவித்து ஆண்டுதோறும் நுகர்வோர் விலைக்குறியீட்டு அடிப்படையில் மின்நுகர்வோர்களுக்கு மின்கட்டணத்தை மாற்றி அமைத்து ஆணை வெளியிடுகிறது. அதன்படி 2025-26 ஆண்டிற்கு ஜீலை 1 ஆம் தேதி முதல் வரக்கூடிய மின்கட்டண மாற்றங்களில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி அனைத்து, 2.42 கோடி வீட்டு நுகர்வோர்களுக்கு ஏற்படக்கூடிய மின்கட்டண மாற்றங்களை அரசே ஏற்று அதற்கான மானியத்தொகையை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும் என்று உத்தரவிட்டதை ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சர் அறிக்கையாக வெளியிடப்பட்டது.
மேலும் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை. தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.374.89 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. வீட்டு மின் நுகர்வோர்களுக்கு, நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதில் இருந்த முழுவிலக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களும் பயனடைவார்கள்.
தற்பொழுது விவசாயம். கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டுதலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலை ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண சலுகைகள்:
- இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிக மின் நுகர்வோர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை (Energy charges) தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.51.40 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 34 இலட்சம் சிறு வணிக மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
- 50 கிலோவாட் வரை ஒப்பந்த பளு (sanctioned load) கொண்ட தாழ்வழுத்த தொழிலாளர்களுக்கு (LT (III) B Industries) உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால் ஆண்டொன்றுக்கு ரூ.76.35 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 2.81 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
- குடிசை மற்றும் குறுந்தொழில்களுக்கு (LT (III) A(1) – Cottage and Micro Industries) உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.9.56 கோடி அரசிற்கு கூடுதல்செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 2.70 லட்சம் குடிசை மற்றும் குறு தொழில் மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
- விசைத்தறி நுகர்வோர்களுக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மேலும் 1001 யூனிட்டுகளுக்கு மேல் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.7.64 கோடி அரசிற்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 1.65 லட்சம் விசைத்தறி நுகர்வோர்களும் பயனடைவார்கள்.
எனவே 2025-26 ஆம் ஆண்டின் மின்கட்டண உயர்வின் படி தமிழ்நாட்டில் சுமார் 2.83 கோடி மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லாமல் பயனடைவார்கள். இதனால் தமிழக அரசிற்கு ஆண்டொன்றுக்கு ரூ.519.84 கோடி கூடுதல் செலவாகும். இந்த மானியத் தொகையினை தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வழங்கும். இது தவிர பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ளவாறு 3.16%-க்கு மிகாமல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.
The post விவசாயம், கைதறி, விசைத்தறி, வழிபாட்டு தலங்கள், தாழ்வழுத்த ஆலைக்கு மின்சார மானியம் தொடரும்: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.