மத்திய பிரதேச மாநிலத்தில் கிணற்றை தூர்வார முயன்ற தொழிலாளர்கள் 8 பேர் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கழிவுநீர் பாதைகள், பாழடைந்த கிணறுகள் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, வாழ்வாதாரம் கருதி இப்பணியில் ஈடுபட முன்வருவோருக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தருவதற்காக கடந்த 2013-ம் ஆண்டு ‘கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கான தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டம்’ இயற்றப் பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையிலும் கழிவுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதும், அவ்வப்போது விஷவாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நின்றபாடில்லை.