ஒரு வீடு வாங்குவதற்காக தங்கள் வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் கொடுத்து வீடும் கிடைக்காமல் வங்கிக் கடனையும் அடைக்க முடியாமல் நிர்கதியாக நிற்கும் நடுத்தர மக்களின் நிலையை உணர்ந்து கொண்டு அவர்களைப் பாதுகாக்க தேசிய அளவில் திட்டம் உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இடைக்கால உத்தரவு ரியல் எஸ்டேட் துறையில் பெரும்மாற்றங்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வீடு கட்டும் பில்டர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்தபோது, நடுத்தர மக்களின் இன்னலை உச்சநீதிமன்றம் சரியாக புரிந்து கொண்டு பல முக்கிய உத்தரவுகளைபிறப்பித்திருப்பது பாராட்டுக்குரியது. வீடு வாங்குவோரின் நலனைப் பாதுகாக்க ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (RERA) போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், வீடுகளை குறிப்பிட்ட நேரத்தில் கட்டி முடிக்காமல் இழுத்தடிப்பது, பாதியில் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு திவாலாகி விட்டதாக முறையீடு செய்வது போன்ற நடவடிக்கைகளால் வீடு வாங்குவோர் ஏமாற்றப்படுவது அதிகரித்து வருவதையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.