ஊர் பெரியவரான ரவி (பிருத்வி), அவருடைய மகன் கண்ணன் (சுராஜ் வெஞ்சரமூடு) ஆகியோர் மீது கொலைக் குற்ற புகார் வருகிறது. அதன் மூலம் தன் பழைய பகையைத் தீர்த்துக்கொள்ள போலீஸ் எஸ்.பி. அருணகிரி (எஸ்.ஜே.சூர்யா), அவர்களை என்கவுன்ட்டர் செய்ய திட்டம் தீட்டுகிறார். இதையறியும் ரவி தரப்பு, அருணகிரியைக் கொல்ல முயற்சிக்கிறது. இதற்காக காளியின் (விக்ரம்) உதவியை நாடுகிறார் ரவி. இதில் களமிறங்கும் காளியை வைத்து, எஸ்.பி.அருணகிரி வேறு திட்டம் போடுகிறார். மாறி மாறி நடக்கும் இந்த சடுகுடு ஆட்டத்தில் என்கவுன்ட்டர் நடந்ததா, அருணகிரி என்ன ஆனார், விக்ரம் யார் பக்கம் நின்றார் என்பதுதான் படத்தின் கதை.
வழக்கமான பழிவாங்கும் கதைதான். அதில் குடும்பம், சென்டிமென்ட்டை கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் அருண்குமார். புதுமையாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டு முடிவுரையைத் திரைக்கதையாக்கி இருக்கிறார். ஒரே இரவில் நடக்கும் கதையை மையப்படுத்தி நிறைய படங்கள் வந்திருக்கின்றன. இதுவும் ஒரே இரவில் நடக்கும் கதைதான். அதை முடிந்தவரை சுவாரஸியமாகக் கொடுக்க இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார்.