வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் திடீரென்று நிகழும் உயிரிழப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அதுகுறித்த விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்து வரும் நாட்களில் இன்னும் தீவிரமடையலாம். இந்த காலகட்டத்தில் நேரடியாக வெயிலில் பணியாற்றுவோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக, சாலையோர வியாபாரிகள், கட்டிட தொழிலாளர்கள், நூறு நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள், சுரங்க தொழிலாளர்கள், பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும். விவசாயிகள், உணவு விநியோக சேவை மேற்கொள்பவர்கள், டெலிவரி பணியில் உள்ளவர்கள், காவல்துறையினர், தீயணைப்பு பணியாளர்கள், போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோரும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்.