பாகிஸ்தானை வீழ்த்தியாகி விட்டது, ரசிகர்களின் நிம்மதிப் பெருமூச்சுடன் அவர்களது சூப்பர் ஸ்டார், அணியின் சுமை விராட் கோலி கடைசியாக சதம் அடித்து அவரது ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால் பொதுவாக கிரிக்கெட்டுக்கு இத்தகைய வெற்றியும் கோலியின் சதமும் நல்லதா என்ற கேள்வி எழாமல் இல்லை.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் என்ற பில்ட்-அப்பை தயவு செய்து ஊடகங்களும் ஐசிசியும் நிறுத்துவது நல்லது. உயிரோட்டமே இல்லாத இந்த ஆட்டம் அதை விட சவசவ என்று கோலியின் இழுவையான ஒரு இன்னிங்ஸ். இவையெல்லாமுமே பில்ட்-அப்புக்கு நிகராக இல்லை என்பதோடு, ஏதோ இந்தியா ஜெயிப்பதற்கும், கோலி சதம் எடுப்பதற்காகவும் நடத்தப்பட்டக் காட்சிப் போட்டி (exhibition match) போல் ஆகிவிட்டது.