மான்செஸ்டர்: ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. இந்நிலையில் 4 -வது டெஸ்ட் போட்டி இன்று (23-ம் தேதி) பிற்பகல் 3.30 மணிக்கு மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்குகிறது.
ஏனெனில், தோல்வி அடைந்தால் டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும். இது ஒருபுறம் இருக்க வேகப்பந்து வீச்சாளர்களின் காயங்கள் இந்திய அணியின் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. ஆல்ரவுண்டர் நித்திஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார். மேலும் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப், இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர், மான்செஸ்டர் போட்டியில் களமிறங்கவில்லை.