டேராடூன்: வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண உதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். உத்தராகண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்வேறு இடங்களில் மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன்காரணமாக கங்கோத்ரி அருகே தரளி என்ற கிராமம் முழுமையாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
தொடர் மழையால் உத்தராகண்ட் முழுவதும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை வாராணசியில் இருந்து உத்தராகண்ட் தலைநகர் டேராடூனுக்கு விமானத்தில் சென்றார். அங்கு மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உள்ளிட்டோருடன் வெள்ளம், நிலச்சரிவு பாதிப்புகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.