சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை அகற்றி சீரமைப்பது குறித்து முடிவெடுக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் தலைமையில் இரண்டு வாரங்களில் குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆலை மூடப்பட்டது. இந்த நிலையில் அபாயகரமான கழிவுகள் ஆலை வளாகத்தில் தேங்கி கிடப்பதால் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆலையை இடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சமூக ஆர்வலர் பாத்திமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “ஆலை வளாகத்தில் உள்ள மாசுவை சீர்படுத்தி, நிலத்தை பழைய நிலைக்கு மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.