கொள்ளிடம்: பாமக 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராடுவது வெறும் கண்துடைப்பு நாடகம் என கடுவெட்டி குரு மகன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில், வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மகன் கனலரசன் நேற்று அளித்த பேட்டி: வன்னியர்களுக்கான 20சதவீதம் தனி இடஒதுக்கீடு மட்டுமே தேவை. அரசியல், ஆட்சி, அதிகாரம் தேவையில்லை. காடுவெட்டி குரு, பாமகவின் முதுகெலும்பாக செயல்பட்டு வன்னிய இளைஞர்களை தன் வசப்படுத்தி பாமக அசுர வளர்ச்சி பெற காரணமாக விளங்கியவர்.
10.5 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு பாமகவும், வன்னியர்களும் போராடுவது வெறும் கண்துடைப்பு நாடகம். வன்னியர்களுக்கான 20 சதவீதம் தனிஇட ஒதுக்கீடு வேண்டுமென போராடியவர் குரு. அதற்கு துணை நின்றது வன்னிய இளைஞர்கள் தான். 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து போராடி வந்த எனது தந்தை வழியில் நானும் போராட தொடங்கி விட்டேன்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விளக்குவேன். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் தெளிவான நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு எப்போதோ கிடைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
The post 10.5% இடஒதுக்கீடு கேட்டு பாமக போராடுவது நாடகம்: காடுவெட்டி குரு மகன் பேட்டி appeared first on Dinakaran.