திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கடந்த ஒன்றரை மாதங்களாக நிறுத்தப்பட்டதால், சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கி, மீண்டும் வேலையை தொடங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மத்திய அரசு சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏரிகள் தூர்வாருதல், கால்வாய் அமைத்தல், வேளாண்மை பணிகள், பண்ணைக்குட்டை அமைத்தல், நீர்நிலைகளை பராமரித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.