சென்னை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
2024-25ம் கல்வியாண்டிற்கான மார்ச்/ஏப்ரல் – 2025 பொதுத்தேர்வுகள் 12ம் வகுப்புக்கு 03.03.2025 முதல் 25.03.2025 வரையும், 11ம் வகுப்புக்கு 05.03.2025 முதல் 27.03.2025 வரையும், 10ம் வகுப்பிற்கு 28.03.2025 முதல் 15.04.2025 வரையும் நடைபெறவுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 தேர்வர்களும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 தேர்வர்களும் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 9,13,036 தேர்வர்களும் தேர்வெழுதவுள்ளனர்.
12ம் வகுப்பு தேர்வு 3,316 மையங்களிலும், 11ம் வகுப்பு தேர்வு 3,316 மையங்களிலும், பத்தாம் வகுப்பிற்கு 4,113 தேர்வு மையங்களிலுமாக மொத்தம் 25,57,354 தேர்வர்கள் 2024-25ம் ஆண்டிற்கான பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர். இத்தேர்வு பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 45,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4800 க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மாணவர்கள்/தேர்வர்கள்/பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும். கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள்: 9498383075 / 9498383076.
தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நேரங்களில் தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் குற்றங்களுக்கு தக்கவாறு தண்டனைகள் வழங்கப்படும். மேலும் ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ / ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளி தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்திட பள்ளி கல்வி/தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்; 8.21 லட்சம் மாணவ – மாணவிகள் நாளை தேர்வு எழுதுகிறார்கள்: தேர்வு மையத்திற்கு செல்போன் எடுத்து வர தடை appeared first on Dinakaran.