சென்னை: மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தியின் மனுவுக்கு நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) பதிலளிக்குமாறு சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகரான ரவிமோகன் என்ற ஜெயம் ரவி, ஆர்த்தி என்பவரை காதலித்து 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ரவிமோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை 3வது குடும்ப நல நீதிமன்றம் இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி நடிகர் ரவி, ஆர்த்தி ஆகியோர் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் நடிகர் ரவி மோகன் விவகாரத்து கோரிய வழக்கு குடும்பநல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ரவி மற்றும் ஆர்த்தி ஆகியோர் நேரில் ஆஜராகினர். அப்போது, ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை. ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து அளிக்க வேண்டும்.
சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆர்த்தியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று நடிகர் ரவி மோகன் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பதிலுக்கு ஆர்த்தி, தனக்கு மாதம் ரூ.40 லட்சத்தை ஜீவனாம்சமாக ரவிமோகன் தரப்பில் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களுக்கு ரவி மோகன், ஆர்த்தி தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
The post 15 ஆண்டு வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து கேட்டு வழக்கு; மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் தர மனைவி மனு: நடிகர் ரவிமோகன் பதில்தர குடும்பநல நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.