சென்னை: உதடு மற்றும் அன்னப் பிளவால் பாதிக்கப்பட்டுள்ள 153 ஏழை குழந்தைகளின் சிகிச்சைக்காக சன் குழுமம் 45 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் குழுமம் பல்வேறு அமைப்புகளுக்கு தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உதடு மற்றும் அன்னப்பிளவு குறைபாடுள்ள ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சன் குழுமம் 45 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
இதற்கான காசோலையை, ஸ்மைல் ட்ரெயின் (SMILE Train) அமைப்பின் தலைமை தொடர்பு மற்றும் தொழில் மேம்பாட்டு நிர்வாகி அஞ்சலி கடோச்சிடம் சன் குழுமம் சார்பில் மல்லிகா மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் வழங்கினர். தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் உதடு மற்றும் அன்னப்பிளவால் பாதிக்கப்பட்ட 153 ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள சன் குழுமம் அளித்த நிதி பயன்படுத்தப்படும் என்று ஸ்மைல் ட்ரெயின் நிர்வாகிகள் தெரிவித்தனர். சன் குழுமம் சார்பில் ஸ்மைல் ட்ரெயின் அமைப்புக்கு இதுவரை அளித்துள்ள 3 கோடியே 96 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் நிதி உதவியின் மூலம், ஆயிரத்து 618 ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post 153 ஏழை குழந்தைகளின் இலவச அறுவை சிகிச்சைக்கு சன் குழுமம் ரூ.45.76 லட்சம் நிதி உதவி appeared first on Dinakaran.