புதுடெல்லி: 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக டெல்லியில் நடந்த கலவரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முன்னதாக, இந்த வழக்கில் சஜ்ஜன் குமாரை குற்றவாளி என டெல்லி நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா கடந்த 12-ம் தேதி அறிவித்தார். மேலும், தற்போது திகார் சிறையில் இருக்கும் சஜ்ஜன் குமாரின் உடல் மற்றும் மனநிலை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிறைத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தூக்கு தண்டனை விதிக்கப்படுவதாக இருந்தால் அதற்கு முன் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறை இது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி காவேரி பவேஜா, குற்றவாளி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.