சேலம் சிவதாபுரம் அம்மன் நகரில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பெய்த மழையால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியது. அப்போது மழை நீர் குடியிருப்பு அருகே சூழ்ந்தது. அப்போது முதல் அப்பகுதி மக்கள் நோய்களால் அவதியுற்று வருகின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்தும் காலியிடத்தில் தேங்கி இருக்கும் நீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சேலம் அருகே சிவதாபுரம் அம்மன் நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சேலத்தில் எப்பொழுது மழை பெய்தாலும் அதிகளவு பாதிக்கப்படும் பகுதியாக சிவதாபுரம் விளங்கி வருகிறது. சிவதாபுரத்தின் அருகே உள்ள சேலத்தாம் பட்டி ஏரியில் நீர் நிரம்பி, உபரி நீர் வெளியேறும் போதெல்லாம் இப்பகுதி வெள்ளக்காடாக மாறிவிடும். தாழ்வான பகுதியாக உள்ளதால் மழை பெய்யும் போது, சிவதாபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகள், குடியிருப்புகளை நீர் சூழ்ந்து, பெரும் அவதிக்குள்ளாக்குவது வழக்கமாக இருந்து வருகிறது.