டுனிடின்: நியூஸிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று டுனிடின் நகரில் நடைபெற்றது. மழை காரணமாக 15 ஓவர்களை கொண்டதாக நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 135 ரன்கள எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் சல்மான் ஆகா 28 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், ஷதப் கான் 14 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 26 ரன்களும் சேர்த்தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் ஜேக்கப் டஃபி, பென் சியர்ஸ்,ஜேம்ஸ் நீஷாம், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 136 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 13.1 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டிம் ஷெய்பர்ட் 22 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்களும், ஃபின் ஆலன் 16 பந்துகளில், 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 38 ரன்களும் விளாசினர்.
முகமது அலி வீசிய 2-வது ஓவரில் ஃபின் ஆலன் 3 சிக்ஸர்களையும், ஷாகின் ஷா அப்ரிடி வீசிய அடுத்த ஓவரில் டிம் ஷெய்பர்ட் 4 சிக்ஸர்களையும் பறக்கவிட்டு மிரளச் செய்தனர். 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 3-வது ஆட்டம் ஆக்லாந்தில் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.