புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ரங்கசாமியே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவையை காகிதமில்லாத சட்டப்பேரவையாக மாற்றும் விதமாக நேவா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.8.16 கோடி நிதி அளித்து 2022-ம் ஆண்டு முதல் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. நேவாவுக்கு மட்டும் இதுவரை ரூ.68 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இன்றைக்கு நேவா பயிற்சி மையம் மற்றும் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை செயலக ஊழியர்கள், பிற அரசு துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம்.