கீவ்: ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள உக்ரைனின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் மீது, ரஷ்ய ராணுவம் நடத்திய மிகவும் சக்தி வாய்ந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 22 பேர் காயமடைந்ததாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார். தங்கள் நாட்டுக்கு எதிராக ரஷ்யா ஒரே இரவில் 206 ட்ரோன்கள், 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 7 பிற ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது உக்ரைனின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து இந்த நகரம் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு இந்த நகரத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் குறித்து தெரிவித்துள்ள கார்கிவ் நகர மேயர் இஹோர் டெரெகோவ், கிழக்கு உக்ரைன் நகரமான கார்கிவ் மீது இரவில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒன்றரை மாத குழந்தை உட்பட 22 பேர் காயமடைந்தனர்.