சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 21 திருக்கோயில்களின் மூலம் கிடைக்கப்பெற்ற 1,074 கிலோ தங்க கட்டிகளை முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ததற்கான பத்திரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.18 கோடி வட்டி கிடைக்கும். கடந்த பல ஆண்டுகளாக திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்களை தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத்தங்கமாக மாற்றி திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து பெறப்படும் வட்டி மூலமாக கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, இருக்கண்குடி மாரியம்மன் திருக்கோயில், பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம், ராமநாதபுரம் ஆதிஜெகநாதபெருமாள் திருக்கோயில்,
ராமநாதபுரம் நாகநாதசுவாமி திருக்கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில், சேலம் சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில், தாயமங்கலம் முத்து மாரியம்மன் திருக்கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயில், சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில், காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி திருக்கோயில், சேலம், கோட்டை அழகிரிநாத சுவாமி திருக்கோயில், ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயில், நாமக்கல், நரசிம்மசுவாமி திருக்கோயில்,
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் ஆகிய 21 கோயில்களில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களில் கோயிலுக்கு பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கி கிடைக்கப்பெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லி கிராம் சுத்தத் தங்கம் பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டு திட்டத்தில் அந்தந்த திருக்கோயிலின் பெயரில் தங்கக் கட்டிகளாக முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆண்டொன்றிற்கு திருக்கோயில்களுக்கு ரூ.17 கோடியே 81 லட்சத்து 36 ஆயிரம் வட்டி தொகையாக கிடைக்கப்பெறுகிறது.
21 திருக்கோயில்களின் பெயரில் பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதற்கு அடையாளமாக சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயில் ஆகிய கோயில்களின் அறங்காவலர் குழு தலைவர்கள், இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர் / செயல் அலுவலர் ஆகியோரிடம் அதற்கான பத்திரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
The post 21 திருக்கோயில்களின் மூலம் கிடைக்கப்பெற்ற 1,074 கிலோ தங்க கட்டிகளை முதலீடு செய்ததற்கான வங்கிப் பத்திரங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.