புதுடெல்லி: கடந்த 1974 ஜூலை 19-ம் தேதி ஹரியானாவின் ஜுலானா பகுதியில் ரேகா குப்தா பிறந்தார். அவரது தந்தை ஜெய் பகவான் ஜிண்டால், பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணியாற்றினார். தந்தையின் பணி காரணமாக, குடும்பம் டெல்லிக்கு இடம்பெயர்ந்தது. டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் ரேகா குப்தா இணைந்தார். டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக பணியாற்றினார். பி.காம் முடித்த பிறகு, காஜியாபாத் ஐஎம்ஐஆர்சி கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.
கல்லூரி காலம் முதலே அரசியலில் தீவிர ஆர்வம் காட்டிய ரேகா குப்தா, டெல்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு 3 முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லி பாஜகவிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார். ரேகா குப்தா, இத்தேர்தலில் டெல்லி ஷாலிமார் பாக் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.