சென்னை: “தமிழகம் முழுவதும் சுமார் 1.75 லட்சம் மாணவர்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி விண்ணப்பம் செய்துள்ளனர். சில தனியார் பள்ளிகளில் மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கான இணைய தளத்தை முடக்கி வைத்திருக்கின்றனர். எனவே, தமிழக அரசு, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு நிதியினை வழங்கி RTE சட்டப்படி முழுமையாக மாணவர் சேர்க்கைக்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் படி ஏழை, எளிய மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கு தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை நிலுவையாக உள்ளது என்கிற காரணத்தை முன்னிறுத்தி RTE-படி 25% இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன. இதில் தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை உடனடியாக தலையிட்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 25 சதவிகித இட ஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்த வேண்டும்.