புதுடெல்லி: அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாகும். இது 140 கோடி மக்களின் கனவு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்று பேசினர். இந்த விவாதங்களுக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நேற்று பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்தது முதல் வறுமையை ஒழிப்போம் என்று அப்போதைய ஆட்சியாளர்கள் கூறி வந்தனர். ஆனால் வறுமை ஒழியவில்லை. மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.