இஸ்தான்புல்: உக்ரைன் – ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்தும் முடிவின்றி நீடிக்கும் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி, ஆயுத உதவிகளை செய்து வந்தாலும், உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த 14ம் தேதி பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உக்ரைனுக்கான தங்கள் தொடர் ஆதரவை தெரிவித்தனர்.
அப்போது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாள்களுக்கு நிறுத்த வேண்டுமென ரஷ்யா அதிபர் புடினுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து “ஐரோப்பிய நாடுகள் முன் வைத்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது, ஆனால் அமைதியை நோக்கி செல்லும் வழிமுறைகளை காண பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயார் என தெரிவித்த புடின், மே 15ம் தேதி இஸ்தான்புல்லில் நடத்தப்படும் நேரா பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் வர வேண்டும்” என ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு உக்ரைன் அதிபரும் ஒப்பு கொண்டார்.
அதன்படி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ருஸ்டெம் உமரோவ் தலைமையிலான உக்ரைன் அதிகாரிகளும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையிலான ரஷ்ய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இருநாட்டு அதிகாரிகளும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
The post 3 வருடங்களுக்கு பிறகு உக்ரைன் – ரஷ்யா இடையே நேரடி அமைதி பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.