சென்னை: சிறுபான்மையின மாணவ, மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் இதுவரை 312 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சிறுபான்மையின மாணவ, மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் பெறுவதை எளிதாக்கி விரைவாக வழங்கும் வகையில் 2023-ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரம் அளிக்கப் பெற்ற குழுவின் (Empowered Committee) ஒப்புதல் பெற்று சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் அறிவிப்பின்படி 2024-ஆம் ஆண்டு முதல் மதவழி சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு (Religious Minority) நிரந்தரச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இக்குழுவால் 6 முறை கூட்டங்கள் நடத்தப் பெற்று 159 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி நடைபெற்ற அதிகாரம் அளிக்கப் பெற்ற குழுவின் (Empowered Committee) 7வது கூட்டத்தில் 160 கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 153 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்படும்.
இத்துறை மூலம் இதுவரை 312 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 246 நிரந்தர அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
The post 312 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.