மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி அபாரமாக விளையாடி டிரா செய்தது. 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடி இந்திய அணி ரன் கணக்கை தொடங்கும் முன்னரே 2 விக்கெட்களை பறிகொடுத்த போதிலும் கேப்டன் ஷுப்மன் கில், கே.எல்.ராகுல் ஜோடி அபாரமாக விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது.
ஷுப்மன் கில் 103 ரன்களும், கே.எல்.ராகுல் 90 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஜோடி மிக அற்புதமாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு எந்த ஒரு வாய்ப்பையும் கொடுக்காமல் அந்த அணி வீரர்களை களத்தில் வெகு நேரம் பீல்டிங் செய்ய வைத்து சோர்வடையச் செய்தது. இந்த ஜோடி 334 பந்துகளை சந்தித்து 203 ரன்களை வேட்டையாடியது.