கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ம் தேதி தீர்ப்பு கூறப்படுகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 8-க்கும் ேமற்பட்ட இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்செயல் தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் பேரில், பொள்ளாச்சி டவுன் போலீசார் முதலில் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு, சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகிய 5 பேர் கடந்த 2019ல் கைது செய்யப்பட்டனர். மேலும், ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் கடந்த 2021ல் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு உள்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், 50க்கும் மேற்பட்ட அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள் உள்ளிட்ட பொருட்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் 8 பேர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். கைதான 9 பேரும் சேலம் சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். தற்போது இவ்வழக்கில் சாட்சி விசாரணை நிறைவடைந்தது. இதையடுத்து திருநாவுக்கரசு உட்பட 9 பேரும், சட்ட விதிகள் 313-ன் கீழ் கேள்விகள் கேட்பதற்காக கடந்த 5ம் தேதி சேலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிபிஐ நீதிமன்றத்தில், நீதிபதி ஆர்.நந்தினிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது அவர்களிடம் தலா 50 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தனர். தொடர்ந்து அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து, இதர நாட்கள் அனைத்திலும் குறுக்கு விசாரணை, இருதரப்பு வக்கீல்கள் வாதம் தொடர்ச்சியாக நடந்தது. இந்நிலையில், இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. நீதிபதி ஆர்.நந்தினிதேவி, வழக்கு விசாரணை முடிந்ததால் வரும் 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும், அன்று குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என அறிவித்தார். கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அரசியல் ரீதியாக இந்த வழக்கு விவாத பொருளாக மாறியுள்ளதால், மே 13ம் தேதி தீர்ப்பு நாளில் கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
The post 6 ஆண்டுக்கு பிறகு இறுதி கட்டத்தை அடைந்தது பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ம் தேதி தீர்ப்பு: கோவை சிபிஐ நீதிபதி அறிவிப்பு appeared first on Dinakaran.