கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சுற்றித் திரியும் யானைகளால், விவசாயம் பாதிக்கப்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், யானைகள் நடமாட்டத்தை தடுக்க வனத் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறி, கிராம மக்கள் 150-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரியில் சுமார் 2 மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், மேகலசின்னம்பள்ளி, வேப்பனப்பள்ளி சுற்றுவட்டாரத்தில் கடந்த 7 ஆண்டுகளாக யானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் மற்றும் சோலார் மின்வேலி அமைக்க வேண்டுமெனக் கூறி சின்னமட்டாரப்பள்ளி, வரட்டனப்பள்ளி, பெலவர்த்தி, நாரலப்பள்ளி, பெரியகோட்டப்பள்ளி, கல்லகுறிக்கி, வேப்பனப்பள்ளி ஊராட்சிகளுக்கு உட்பட்ட 150-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.