நாகை: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு 2023 அக்டோபர் 14ம் தேதி ‘செரியாபாணி’ என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23ம் தேதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கடந்தாண்டு ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பயணிகள் கப்பல் சேவையை துவக்கியது. இருநாட்டு பயணிகளின் ஆர்வத்தால் சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இரு மார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் வங்கக்கடலில் அடுத்தடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த 24ம் தேதி முதல் கப்பல் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து 8 நாட்களுக்கு பிறகு இன்று (1ம் தேதி) முதல் வழக்கம்போல நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் புறப்பட்டு சென்றது. காலை 7.30 மணிக்கு புறப்பட்ட கப்பலில் 112 பேர் பயணம் செய்தனர்.
The post 8 நாட்களுக்கு பிறகு நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கம்: 112 பேர் பயணம் appeared first on Dinakaran.