சென்னை: “காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் 72 கோடி ரூபாயில், 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும். அதுவும், 24 மணிநேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறை, வைஃபை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பல வசதிகளுடன் அந்த விடுதிகளை அமைக்க இருக்கிறோம்” என்று சென்னையில் நடந்த உலக மகளிர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், உலக மகளிர் தினம் இன்று (மார்ச் 8) சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமே ரத்த பேதம் இல்லை, பால் பேதம் இல்லை என்பதுதான். அதுவே முழுமையான சமூக நீதி. திராவிட இயக்கத்தை உருவாக்கிய பெரியார், வாழ்நாளெல்லாம் பெண் விடுதலைக்காக உழைத்தார். திராவிட இயக்க ஆட்சிக் காலங்களில் பெண்களுக்கு உரிமைகள் மீட்டுத் தரப்பட்டது.