*வனத்துறை விரிவாக பதிலளிக்க உத்தரவு
மதுரை : அகஸ்தியர் அருவியில் குளிக்கவும், வாகனங்களை நிறுத்தவும் உள்ளுர் மக்களிடம் கட்டணம் வசூலிக்கும் விவகாரத்தில், வனத்துறையின் அறிக்கை திருப்தியளிக்காததால் மீண்டும் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி மாவட்டத்தில் அகஸ்தியர் கோவில் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில் பாரம்பரியமிக்க கோயில்கள் உள்ளன.
இந்த பகுதியில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கே, அகஸ்தியர் கோயிலின் அருகே அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு பொதுமக்கள், பக்தர்கள் என பலரும் வந்து குளித்து செல்கின்றனர்.
மேலும் இந்த பகுதியில் நுழைவதற்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நுழைவு கட்டணம் உள்ளூர் மக்களிடமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அருவியில் குளிப்பதற்கும் மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கும், தமிழ்நாடு வனத்துறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அருவியில் குளிப்பதற்கும் மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கு பணம் வசூல் செய்வது பேரூராட்சி, நகராட்சி அல்லது பஞ்சாயத்து நிர்வாகம் ஆகியோர் மட்டுமே செய்ய வேண்டும். ஆனால், வனத்துறை அலுவலர்கள் இணைந்து பணம் வசூல் செய்வது ஏற்கத்தக்கதல்ல.
நுழைவு கட்டணம் என்பது உள்ளூர் பொதுமக்களிடமும் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அகஸ்தியர் கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கும் உள்ளூர் பொது மக்களுக்கும் நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கு தமிழ்நாடு வனத்துறை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் டிரஸ்ட் சார்பாக பணம் வசூலிக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வனத்துறை தரப்பில், நுழைவு கட்டணம் வசூலிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘வனத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பணம் எதற்காக வசூலிக்கப்படுகிறது? எதற்காக செலவிடப்படுகிறது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
பொதுவாக நுழைவு கட்டணம் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என்று மட்டும் உள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நுழைவு கட்டணம் வசூலிப்பது குறித்த வனத்துறை அறிக்கை திருப்தியளிக்கவில்லை.
வன பாதுகாப்பு, புலிகள் பாதுகாப்பு என அரசிடம் இருந்து பெறும் தொகையை வனத்துறை என்ன செய்கிறது’’ என கேள்வி எழுப்பினர். வனத்துறை தரப்பில் மீண்டும் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் எனக்கூறி மனுவின் மீது உரிய தீர்ப்பளிப்பதாக கூறி ஒத்திவைத்தனர்.
The post அகஸ்தியர் அருவியில் குளியல், பார்க்கிங் கட்டணம் தொடர்பான அறிக்கையில் திருப்தியில்லை appeared first on Dinakaran.