திருவாரூர்/ நாகப்பட்டினம்: தொடர் மழையால் குறுவை, சம்பா சாகுபடியில் இழப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது பருத்தி, உளுந்து பயிர்களும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் தை மற்றும் மாசிபட்டங்களில் 22,142 ஏக்கரில் உளுந்து, 2,140 ஏக்கரில் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மையில் பெய்த தொடர் மழையால் கானூர், கள்ளிக்குடி, தென் ஓடாச்சேரி, பழையவளம், அக்கறை ஓடாச்சேரி, சோழங்கநல்லூர், வைப்பூர், அடியக்கமங்கலம், சேமங்கலம் உட்பட மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர்பருத்தி, உளுந்து பயிர்கள், வயலில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது மழைநீர் வடிந்துள்ள நிலையில், மார்ச் 10 முதல் 14-ம் தேதி வரை மீண்டும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.