சென்னை: இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் தலைநகராகவும் திகழ்வது சென்னை. சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருக்கின்றன. சென்ட்ரல் ரயில் நிலையம், மெரினா கடற்கரை, ரிப்பன் மாளிகை, எல்.ஐ.சி கட்டிடம் என ஏராளமான குறிப்பிடத்தகுந்த இடங்கள் உள்ளன. ஆனால் சென்னையில் வசிக்கும் பலருக்கும் தெரியாத இடமாகவும், அதே நேரத்தில் பிரபலமான இடமாகவும் இருப்பது அடையாறு ‘புரோக்கன் பிரிட்ஜ்’ எனப்படும் உடைந்த பாலம்.
சென்னை சாந்தோம் கடற்கரைக்கும், பெசன்ட் நகர் கடற்கரைக்கும் இடையே அடையாறு கலக்கும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியை மக்கள் கடக்க வேண்டும் என்பதற்காக 1967ம் ஆண்டு ஒரு பாலம் கட்டப்பட்டது. 10 ஆண்டுகள் மக்கள் பயன்பாட்டில் இந்தப் பாலம் இருந்தது. இப்பாலத்தின் மீது காலை மற்றும் மாலை நேரத்தில் நின்றால், அது மனதிற்குச் சுகமான அனுபவத்தைக் கொடுக்கும் என்பது மறுப்பதற்கில்லை. இதனால் அந்த காலகட்டத்தில் மக்கள் அதிகம் வந்து செல்லும் ஒரு பகுதியாக இந்தப் பாலம் திகழ்ந்தது.
எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்ஷாக்காரன்’ படத்தில் வரும் ‘கடலோரம் வாங்கிய காற்று குளிராக இருந்தது நேற்று’ பாடலில் இந்த பாலத்தின் அழகை அற்புதமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். அதேபோன்று, வாலி படத்தில் சிம்ரனிடம் அஜித் காதலைச் சொல்லும் சீன் உட்பட பல்வேறு சினிமாக் காட்சிகளில் இந்த புரோக்கன் பிரிட்ஜை பார்த்திருப்பீர்கள். ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக 1977ம் ஆண்டு அடித்த பெரும் புயலில் இந்தப் பாலம் உடைந்து போனது.
இந்த பாலத்தை மீண்டும் சீரமைக்கவோ அல்லது கட்டப்படவோ இல்லை. அதன்பின்னர் சுற்றுத்தலமாக மாறிய இந்தப் பாலம் காலப்போக்கில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உருவெடுத்தது. கொலை, வழிப்பறி, பெண்கள் மீதான அத்துமீறல்கள் ஆகியவையும் இந்த இடங்களில் அரங்கேறின. இதனால் பொழுது சாய்ந்த பின்னர் புரோக்கன் பிரிட்ஜுக்கு செல்வது ஆபத்து என காவல்துறையே எச்சரித்தது. இரவு நேரத்தில் போதை ஆசாமிகளின் அட்டூழியங்களும் இங்கே அதிகரித்தன.
அதன்பின்னர் காவல்துறை அங்கே கண்டிப்பு காட்டி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது அந்த இடம் சினிமா படங்கள், குறும்படங்கள், புகைப்பட ஆல்பங்கள் எடுக்கும் இடமாகவும், சுற்றுத்தலமாகவும் மாறியிருக்கிறது. இருப்பினும் மாலை நேரத்திற்குப் பின்னர் அங்கே செல்வது பாதுகாப்பற்றதாகவே கருதப்படுகின்றது. இந்தப் பாலத்தை தற்போது மீண்டும் கட்டினால் கண்டிப்பாகச் சென்னையின் பிரபல சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக மாறும் என்பது சமூக ஆர்வலர்கள் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் அதற்குச் சாத்தியம் உள்ளதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கூட கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது. அதாவது, சென்னை மெரினா கடற்கரையில் மீன்கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் லூப் சாலை – பெசன்ட் நகர் இடையிலான உடைந்த பாலத்தை மீண்டும் அமைக்கச் சாத்தியம் இருக்கிறதா? என்றும், அதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டதை எளிதில் யாரும் மறந்து விட முடியாது.
அதற்கு காரணம், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில் இருந்து, பெசன்ட் நகர் ஊரூர் குப்பத்திற்கு வர வேண்டுமென்றால், இந்த பாலத்தின் மூலம், 15 நிமிடங்களுக்குள் சென்று விடலாம். ஆனால் தற்போது பாலம் உடைந்து விட்டதால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக செல்ல வேண்டியிருக்கிறது. எனவே தான் இந்த உடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடம் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
அதுமட்டுமல்ல, அடையார் பாலம் மற்றும் பசுமைவழிச் சாலை எப்போதும் அதிக அளவிலான வாகன போக்குவரத்து நிறைந்ததாக உள்ளன. பசுமைவழிச்சாலை மற்றும் சாந்தோம் வழித்தடத்தில் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோரின் அரசு இல்லங்கள் நிறைந்துள்ளன. கல்வி நிறுவனங்கள், கடற்கரை பகுதியை அணுகும் பகுதி, தேவாலயங்களும் உள்ளன. அதனால் அங்கு அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த சாலையை அகலப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாநகராட்சி, பட்டினப்பாக்கம் -சீனிவாசபுரம் மற்றும் பெசன்ட்நகர் ஊரூர் குப்பம் இடையே அடையாற்றின் குறுக்கே உடைந்த பாலம் வழியாக கேபிளில் தொங்கும் பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ரூ.20 லட்சம் செலவில் டெண்டர் கோரியுள்ளது. இதில் தெரிவு செய்யப்படுபவர்கள் கேபிளில் தொங்கும் பாலம் அமைப்பதற்கான நில கணக்கீடு, போக்குவரத்து கணக்கீடு, அந்த தரவுகளை பகுப்பாய்வு செய்தல், இத்திட்டத்துக்கு மாற்று திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 கட்டங்களாக அமைகிறது
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சீனிவாசபுரம் முதல் ஆல்காட் ஊரூர் குப்பம் வரை உள்ள உடைந்த பாலத்தை கேபிள் பாலமாக கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாலம் கட்டுவதால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. நடை மேம்பாலமாக கட்டுவதற்கு திட்டமிட்டு இருக்கிறோம். கேபிளில் தொங்கும் பாலம் வழக்கமாக கட்டப்படும் பாலத்தை விட நன்றாக இருக்கும்.
3 கட்டங்களாக இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டத்தில், 10 நாட்களுக்குள் பாலம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பித்தல், 2வது கட்டத்தில், அனைத்து துறைகளிடம் இருந்து 20 நாட்களுக்குள் அனுமதி பெறுவது, 3ம் கட்டத்தில், பாலம் வடிவம், எவ்வாறு அமைய இருக்கிறது உள்ளிட்டவை 45 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு திட்டமிட்டு இருக்கிறோம். எனவே இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது,’’ என்றனர்.
The post அடையாறு உடைந்த பாலத்துக்கு மாற்றாக சீனிவாசபுரம்-ஊரூர் குப்பம் வரை கேபிள் பாலம் அமைக்க முடிவு: அறிக்கை தயார் செய்ய டெண்டர் appeared first on Dinakaran.