சென்னை: டி.டி.வி. தினகரன் 100 சதவீதம் விரக்தியில் பேசுகிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார். சொந்த நலனுக்காக அதிமுகவை எடப்பாடி பலவீனப்படுத்திவிட்டார் என்று டிடிவி தினகரன் விமர்சித்ததற்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது;
டி.டி.வி. தினகரன் 100 சதவீதம் விரக்தியில் பேசுகிறார். அமமுக விரைவில் காணாமல் போய்விடும் என்று மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதிமுகவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது, அது குறித்து டிடிவி கவலைப்பட வேண்டாம். அமமுக காற்றில் கற்பூரம் கரைவதுபோல் கரைந்து கொண்டிருக்கிறது. அமமுக கட்சி தொடங்கியபோது இருந்தவர்கள் எல்லாம் நாள்தோறும் வெளியேறிக் கொண்டே இருக்கின்றனர். அமமுக கப்பலில் ஓட்டை விழுந்து இருக்கிறது, அது எப்போது வேண்டுமானாலும் மூழ்கும் என்று தெரிந்துதான் நிர்வாகிகள் விலகுகின்றனர். டிடிவியிடம் இருந்து தப்பித்து பிழைத்தால் போதும் என்று அமமுக நிர்வாகிகள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் விமர்சித்துள்ளார்.
The post அமமுக காற்றில் கற்பூரம் கரைவதுபோல் கரைந்து கொண்டிருக்கிறது: டி.டி.வி. தினகரனுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி!! appeared first on Dinakaran.