டெல் அவிவ்: ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு பதிலளித்த ஈரான் சுப்ரீம் லீடர் (உச்ச தலைவர்) அயதுல்லா அலி காமெனி, ‘ஈரான் ஒருபோதும் அடிபணியாது. இஸ்ரேல் செய்த தவறுக்கு அந்நாடு தண்டிக்கப்படும். இதில் அமெரிக்கா தலையிட்டால் ஈடுசெய்ய முடியாத சேதத்தை சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் ஈரான்-இஸ்ரேல் மோதல் மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பதற்காகவும், 2,500 கிமீக்கு அப்பால் உள்ள அந்நாட்டிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவும் இஸ்ரேல் கடந்த 13ம் தேதி ஈரான் மீது தாக்குதல் தொடுத்தது. ஈரானின் அணு ஆயுத உற்பத்தி தளங்கள், எண்ணெய் கிணறுகள், சேமிப்பு கிடங்குகள், சுத்திகரிப்பு ஆலைகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதில், ஈரானின் முக்கியமான அணு மையங்கள் சேதமடைந்த நிலையில், பல அணு விஞ்ஞானிகளும், ராணுவ தளபதிகளும் பலியாகினர். இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான அறிவிக்கப்படாத இப்போர் 6வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையிலும், இஸ்ரேலின் 25 போர் விமானங்கள் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 40 ராணுவ தளங்களில் தாக்குதல் நடத்தின. இதில், ராணுவ கட்டுப்பாட்டு மையங்கள், ஏவுகணை சேமிப்பு தளங்கள் தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. இதே போல, ஈரானும் பல ஏவுகணைகளை தொடர்ந்து வீசி வருவதால், இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களில் தொடர்ச்சியாக சைரன் சத்தங்கள் ஒலித்து வருகின்றன.
மக்கள் பாதுகாப்பு பதுங்குமிடங்களில் பத்திரமாக இருக்க இஸ்ரேல் அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் இருந்து பாதியிலேயே புறப்பட்டு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், நேற்று முன்தினம் இரவு வெள்ளை மாளிகையின் சிட்சுவேஷன் அறையில் நடந்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு, ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். ‘‘தன்னை உச்ச தலைவர் என கூறிக் கொள்பவர்கள் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். அவர் எளிதான இலக்குதான். அவர் இருக்கும் இடத்திலேயே பத்திரமாக இருக்கலாம். அவரை கொல்லும் எந்த திட்டமும் இப்போதைக்கு இல்லை. ஆனால் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்’’ என டிரம்ப் மிரட்டல் விடுத்தார். ஏற்கனவே, ஈரான் உச்ச தலைவர் காமெனியை பழிதீர்த்தால் மட்டுமே இப்போர் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறிய நிலையில், அதிபர் டிரம்பின் பகிரங்க எச்சரிக்கை பதற்றத்தை அதிகரித்தது. டிரம்பின் இந்த அச்சுறுத்தலை ஈரான் உச்ச தலைவர் காமெனி நேற்று நிராகரித்தார். ஈரான் அரசு தொலைக்காட்சியில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம், காமெனி நாட்டு மக்களிடம் உரையாடினார்.
அதில் அவர், ‘‘டிரம்பின் அச்சுறுத்தும், அபத்தமான அறிக்கைகளை நிராகரிக்கிறேன். ஈரான், அதன் மக்கள் மற்றும் அதன் வரலாற்றை அறிந்த புத்திசாலிகள் இந்த நாட்டிடம் ஒருபோதும் அச்சுறுத்தல் மொழியில் பேச மாட்டார்கள். ஏனெனில் ஈரான் சரணடையக் கூடியதல்ல. ஈரான் யாரிடமும் சரணடையாது. ஈரான் மீது யாரும் அமைதியையும், போரையும் திணிக்க முடியாது. இஸ்ரேல் செய்த தவறுக்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இதில், அமெரிக்காவின் எந்தவொரு ராணுவ ஈடுபாடும் சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்கர்கள் அறிந்திருக்க வேண்டும்’’ என கூறி உள்ளார். ஈரான்-இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் காமெனி மக்கள் மத்தியில் தோன்றுவது இதுவே முதல் முறை. பொதுவாக அவர் இருப்பிடம் மிக ரகசியமாக வைத்திருக்கப்படும். இந்த வீடியோவிலும் பழுப்பு நிற திரைச்சீலைகள் கொண்ட அறையில் அவர் அமர்ந்திருக்கும் நிலையில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் மிரட்டலுக்கு காமேனி உறுதியான பதிலளித்துள்ள நிலையில், இப்போரில் அமெரிக்கா பங்கேற்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது. இதற்கிடையே ஈரானுக்கு துருக்கி ஆதரவு தெரிவித்துள்ளது. பல அரபு நாடுகளும் இஸ்ரேலின் தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளன. இதனால் இந்த மோதல் மத்திய கிழக்கில் மிகப்பெரிய அளவிலான போராக உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் பதிலுக்காக இஸ்ரேல் காத்திருக்கும் நிலையில், அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை நேற்றிரவு கூடி அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசித்துள்ளது. இந்த விவகாரம் மத்திய கிழக்கை தாண்டி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிரட்டலுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது: சுப்ரீம் லீடர் காமெனி அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.