சேலம்: அரசு அனுமதியின்றி பவுண்டேசன் தொடங்கிய விவகாரத்தில் சேலம் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தரிடம் போலீசார் நேற்று 6.15 மணி நேரம் விசாரணை நடத்தினர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசின் முன் அனுமதியின்றி பூட்டர் பவுண்டேசன் என்ற நிறுவனத்தை தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணைப் பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் மீது தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் கருப்பூர் போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு தடையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட ஜாமீனையும் ரத்து செய்ய போலீஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்மன் அனுப்பி விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. அதே போல மாஜி பதிவாளர் தங்கவேலின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் 12 வாரத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். சேலம் சூரமங்கலம் உதவி கமிஷனர் ரமலி ராமலட்சுமி, துணைவேந்தர் ஜெகநாதனுக்கு சம்மன் அனுப்பி 2 நாள் விசாரணைக்கு வருமாறு கூறியிருந்தார். அதன்படி ஜெகநாதன் நேற்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானார்.
அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அனைத்தும் கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது. பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனம் அரசின் அனுமதியில்லாமல் தொடங்கப்பட்டது, அவர் ஓய்வு பெற்ற பிறகும், அந்த நிறுவனம் மூலம் பலனை அனுபவிக்கும் வகையிலும் சட்டத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு அரசிடம் அனுமதி வாங்கப்பட்டதா? துணை வேந்தர் ஜெகநாதன் உள்பட 4 பேர் தலா ஒரு லட்சம் ரூபாய் அதில் மூதலீடு செய்திருந்தனர். அந்த பணத்தை அரசு அனுமதியில்லாமல் முதலீடு செய்திருந்தனரா? அரசு பொருட்களை தேர்தல் நடத்தும் தனியார் கம்பெனிக்கு பயன்படுத்தியது, மாதம் ஆயிரம் ரூபாய் வாடகையில் பிரமாண்டமான கட்டிடத்தை பயன்படுத்தியது என அடுக்கடுக்கான கேள்விகளை துணை வேந்தரிடம் உதவி கமிஷனர் கேட்டார். அவ்வாறு சுமார் 300க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.
இந்த விசாரணை மாலை 5.15 மணிக்கு நிறைவடைந்தது. துணை வேந்தரிடம் 6.15 மணி நேரம் சரமாரி கேள்விகளை கிடுக்கிப்பிடியாக கேட்டு விவரங்களை போலீசார் பதிவு செய்தனர். அடுத்ததாக பதிவாளர் தங்கவேல், இணைப்பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகிய 3 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட இருக்கிறது.
The post அரசு அனுமதியின்றி பவுண்டேசன் தொடங்கிய விவகாரம்; பெரியார் பல்கலை. துணைவேந்தரிடம் விசாரணை: 300 கேள்விகள் கேட்டு 6.15 மணி நேரம் போலீசார் கிடுக்கிப்பிடி appeared first on Dinakaran.