தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி பொது நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவத்தை குறிப்பிட்டு, அதனுடன் விலைமாதுவை தொடர்புபடுத்தி கற்பனைக் கதை ஒன்றைப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சைவம், வைணவம் ஆகிய இரண்டும் இந்து மதத்தின் அங்கமாக உள்ள சமய வழிபாட்டு முறைகளாகும். இதில் நம்பிக்கை கொண்டுள்ள கோடிக்கணக்கான மக்கள் வசிக்கும் நமது நாட்டில், அவர்களது நம்பிக்கையை கேலி செய்யும் வகையில்
பேசுவது அப்பட்டமான, அநாகரிகமான செயல். அதுவும் அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஒருவர் இத்தகைய தரமற்ற வார்த்தைகளை பொது மேடையில் உச்சரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. கடவுள் மறுப்பு என்பது ஒரு சித்தாந்தம். அதை திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்த திமுக-வினர் பின்பற்றுவது அவர்களது உரிமை. ஆனால், மாற்றுக் கருத்து கொண்டவர்களை புண்படுத்தும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை திமுக-வினர் உணர வேண்டும்.