ஆரியர்கள் பற்றிய தவறான கருத்தை தமிழகத்தில் திணிக்க முயற்சித்தார் பெரியார். உண்மையில், ‘ஆரியர் – திராவிடர் வெவ்வேறு இனம்’ என்பது ஒரு பொய். அது கடந்த 60-70 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட, பரப்பப்பட்ட கதை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் சமூகவியல் துறை மற்றும் தென்னிந்திய ஆய்வுகளுக்கான மையம் சார்பில் ‘சிந்து நாகரிகம் – மக்கள் மற்றும் தொல்பொருளியல் மீதான பார்வை’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது: சிந்து நாகரிகம் மிகவும் பழமையானது. எனக்கு தெரிந்து, மற்ற நாகரிகங்களைவிட மிக அதிக அளவில் வன்முறைக்கு உள்ளான நாகரிகம் அது. சிந்து நாகரிகத்தின்மீது முதல் தாக்குதலை நடத்தியவர்கள் ஐரோப்பியர்கள். 1800-களில் முழு உலகையும் ஐரோப்பா காலனித்துவம் செய்தது. அப்போது உலகில் வெள்ளை, மஞ்சள், கறுப்பு ஆகிய 3 இனங்களில் வெள்ளை இனம்தான் உயர்ந்தது என நிற அடிப்படையில் பாகுபாடு இருந்தது. வின்ஸ்டன் சர்ச்சில் மற்ற இனத்தவர்களை நாய்கள்போல கருதினார்.