இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடந்த 2022 முதல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரியில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் லண்டன் சென்றபோது, இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தான், பிரதமர் மோடி – இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இரு நாடுகள் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இப்போது கையெழுத்தாகி இருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தால் இந்திய நகைகள், வைரங்கள், மருந்துகள், தேநீர், அரிசி, ரசாயன பொருட்கள் மீதான இறக்குமதி வரியை இங்கிலாந்து அரசு கணிசமாக குறைக்கும். அதேவேளையில், இங்கிலாந்தின் சொகுசு கார்கள், மதுபானங்கள், மின்னணு சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள், விமான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை இந்திய அரசு கணிசமாக குறைக்கும். குறிப்பாக, இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் சொகுசு கார்களின் விலை, இந்தியாவில் 30 சதவீதம் வரை குறையும் என்கின்றனர்.