காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழுத்தி அழுத்தி சொல்கிறார். ஆனால், யதார்த்தம் அப்படி இல்லை என்று சொல்லும் கும்பகோணம் காங்கிரஸார், அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளாகியும் கட்டப்படாமல் கிடக்கும் கும்பகோணம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை அதற்கு எவிடென்ஸாக காட்டுகிறார்கள்.
சுமார் 75 வருடங்களுக்கு முன்பு, மருத்துவர் மகாலிங்கம் என்பவர் கும்பகோணம் நகர காங்கிரஸ் கமிட்டிக்கு அலுவலகம் கட்டுவதற்கான முயற்சியில் இறங்கினார். இதற்கான நிதியைத் திரட்டுவதற்காக பொருட்காட்சி நடத்தியவர், அதில் சேர்ந்த நிதியைக் கொண்டு 1950-ல் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சன்னிதி தெருவில் சுமார் 3 ஆயிரம் சதுர அடி இடத்தை வாங்கினார். அத்தோடு அந்த முயற்சி கிடப்பில் போனதால், கட்சி அலுவலகம் கட்டுவதற்காக வாங்கப்பட்ட இடமானது ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. ஒருகட்டத்தில், காங்கிரஸார் பெருமுயற்சி எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தை மீட்டனர்.