
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை எம்.ஜி.ஆர் வெளிநாடுகளில் படமாக்கிய போது அதற்கு உதவியவர் எழுத்தாளர் மணியன். இதனால், எம்.ஜி. ஆருக்கு நெருக்கமானார். அதே போல் வித்துவான் வே லட்சுமணனும் அவருக்கு நெருக்கமாக இருந்தார். இவர்கள் இருவருக்கும் உதவ வேண்டும் என்பதற்காக, தயாரிப்பாளர் ஆக்கினார், எம்.ஜி.ஆர். இதற்காக அவர்கள் உருவாக்கிய நிறுவனம், உதயம் புரொடக்‌ஷன்ஸ். இதன் லோகோ டிசைனை எம்.ஜி.ஆரே வடிவமைத்து 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தார். அவை ‘இதயவீணை’, ‘சிரித்து வாழவேண்டும்’, ‘பல்லாண்டு வாழ்க’. இதில் விகடனில் மணியன் எழுதிய நாவல்தான் ‘இதய வீணை’ என்ற பெயரில் படமானது.
சிறு வயதிலேயே பெற்றோரால் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் சுந்தரம், காஷ்மீர் சென்று சுற்றுலா வழிகாட்டியாக மாறுகிறார். அங்கு சுற்றுலா வரும் கல்லூரி மாணவிகளிடையே தனது தங்கை நளினியைச் சந்திக்கிறார். அண்ணன் என்பது தெரியாமலேயே அவருக்கு உதவுகிறார். பிறகு மாணவிகளுடன் சென்னை திரும்புகிறார். தங்கை நளினி, கிரியை காதலிப்பதை அறிந்து அவர்களின் திருமணத்துக்கு உதவும் சுந்தரத்துக்கும் நளினியின் தோழி விமலாவுக்கும் காதல் வருகிறது. இதற்கிடையில் அங்கு ஏற்படும் சிக்கல்களை சமாளித்து, ‘உங்க வாயாலேயே நீதான் என் மகன்னு சொல்ல வைக்கிறேன்’ என்று அப்பாவிடம் போட்ட சபதத்தை எப்படி நிரூபிக்கிறார் என்பது கதை.

