வாஷிங்டன்: இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள அதிகப்படியான வரி அமெரிக்காவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும் அதிபர் ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பருமான ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.
இந்தியா அதிக வரி விகிதத்தைக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டி வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அதற்கு பதில் நடவடிக்கையாக அமெரிக்காவும் இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப் போவதாகக் கூறி வந்தார். இந்நிலையில், இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதித்த ட்ரம்ப், அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக கூடுதலாக 25% வரி விதிக்கப்படுவதாக அறிவித்தார். இதன்மூலம், அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி பொருட்களுக்கான வரி விகிதம் 50% ஆக அதிகரித்துள்ளது.