புதுடெல்லி: ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டுக்குள் இறுதி செய்வது குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பு ஒரே நாணயம், ஒரே விசா நடைமுறையை பின்பற்றுகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக உர்சுலா வோன் டெர் லியென் பதவி வகிக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.