கொழும்பு: இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பால் சீனாவுக்கு ரூ.60,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மிகப்பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலாவணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், இலங்கை நாணயத்தின் மதிப்பும் கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனிடையே உள்கட்டமைப்பு உள்ளிட்ட திட்டங்களுக்காக இலங்கை சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளிடமும், மேலும் உலக வங்கியிடமும் நிதியுதவி கோரியது.
அதன்படி சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் கடன் மறுசீரமைப்பை இலங்கை அரசு கொண்டு வந்தது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை ஏற்ற சீனா அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது. இந்நிலையில் இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பால் சீனாவுக்கு பெருமளவு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சீனத்தூதர் குய் ஜென்ஹாக் கூறியதை மேற்கோள்காட்டி சீனாவின் டெய்லி நியூஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
அதில், “2022ம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை, ரூ.4 லட்சம் கோடி கடனுக்கான மறுசீரமைப்பை தொடங்கியது. இலங்கையுடன் சீனாதான் முதலில் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. வௌிநாட்டு கடன் மறுசீரமைப்புக்கு இணங்கிய முதல் நாடாகவும் சீனா உள்ளது. ஆனால் இலங்கையின் கடன் மறுசீரமைப்பால் சீனாவின் ஏற்றுமதி, இறக்குமதி பங்குதாரரான சீன எக்சிம் வங்கிக்கு ரூ.60,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இலங்கை கடன் மறுசீரமைப்பால் ரூ.60,500 கோடி இழப்பு: சீனா அறிவிப்பு appeared first on Dinakaran.