ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலி நகரில் ‘பைக் ரேஸ்’ என்ற பெயரில் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற மூன்று இளைஞர்களை காவல்துறையினர் பிடித்து, நடுரோட்டில் உட்கார வைத்து பொதுமக்கள் முன்னிலையில் லத்தியால் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்தை காணொலியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். இளைஞர்களுக்கு காவல்துறையினர் தாங்களாகவே நடுரோட்டில் தண்டனை வழங்கியது தவறான செயல் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று கூறி சமூக ஆர்வலர்களும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவினரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் பதிவு செய்துள்ளனர். சட்டமீறலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு காவல்துறையினர் தாங்களே பொது இடத்தில் தண்டனை கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.