லக்னோ: உத்தரப் பிரதேச மாநில தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தை ரூ.16,000 ஆக உயர்த்தப்படுவதாகவும், போனஸாக ரூ.10,000 வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவுக்குப் பிறகு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13-ல் துவங்கி 45 நாட்கள் மகா கும்பமேளா விழா நடைபெற்றது. இதில், இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமாக, சுமார் 65 கோடி பேர் கலந்துகொண்டு புனித நீராடியதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கோடிக்கணக்கான மக்கள் வருகையால் ஏற்படும் அசுத்தங்கள், குப்பைகளை அகற்ற ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டிருந்தனர்.